(ஆகவே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நேரத்தில்) இரு வாலிபர்கள் அவருடன் சிறையில் (தங்கள் குற்றங்களுக்காக) நுழைந்தனர். அவ்விருவரில் ஒருவன், “நிச்சயமாக நான் மதுவை பிழிவதாக என்னை கனவில் பார்த்தேன்” என்று கூறினான். இன்னும், மற்றவனோ, “என் தலை மேல் நான் ரொட்டியைச் சுமக்கும் நிலையில், அதிலிருந்து பறவைகள் புசிப்பதாக நிச்சயமாக நான் என்னை கனவில் பார்த்தேன்” என்று கூறினான். “இதன் விளக்கத்தை எங்களுக்கு அறிவிப்பீராக! நிச்சயமாக நாங்கள் உம்மை நல்லறம் புரிபவர்களில் காண்கிறோம்” (என்று அவ்விருவரும் கூறினார்கள்).