இணைவைக்கும் பெண்களை - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - மணக்காதீர்கள். திட்டமாக, நம்பிக்கையாளரான ஓர் அடிமைப்பெண் இணைவைப்பவளைவிடச் சிறந்தவள், (இணைவைக்கும்) அவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே! இணைவைக்கும் ஆண்களுக்கு - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - நீங்கள் (நம்பிக்கையாளரான பெண்ணை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். திட்டமாக நம்பிக்கையாளரான ஓர் அடிமை இணைவைப்பவனைவிடச் சிறந்தவர், அவன் உங்களைக் கவர்ந்தாலும் சரியே. (இணைவைக்கும்) அவர்கள் (உங்களை) நரகத்திற்கு அழைக்கிறார்கள். அல்லாஹ்வோ, தன் கட்டளையினால் சொர்க்கம் இன்னும் மன்னிப்பிற்கு (உங்களை) அழைக்கிறான். இன்னும், மக்களுக்குத் தன் வசனங்களை அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக விவரிக்கிறான்.